ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகக் கூறி, அந்தக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி திட்டமிட்ட அவதூறு பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், அரசாங்கத்திற்கு ஆதரவான சில தரப்புகளும், விடுதலைப் புலிகள் சார்பு கருத்துக்களை பரப்புவதாகக் கூறப்படும் குழுக்களும் இணைந்து இந்த பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வரலாறு கொண்ட சில தரப்பினரே தற்போது ராஜபக்ச குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் சில முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பிலும் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்கள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவை தொடர்பில் அரசாங்கம் விளக்கம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய அவர், அவற்றை முன்வைப்பவர்கள் உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக