சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு ஆயுத மோதல்களுக்கு நிதி திரட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் தங்க வர்த்தகத்தை இலக்காகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்த புதிய நடவடிக்கையின் கீழ், சூடானை பூர்வீகமாகக் கொண்ட தங்கத்தை வாங்குதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் அல்லது கைமாற்றம் செய்தல் ஆகிய அனைத்திற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தங்கம் பிரித்தெடுக்கும் பணிகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மற்றும் சயனைடு உள்ளிட்ட வேதிப்பொருட்களை சூடானுக்கு விற்பனை செய்வது, விநியோகிப்பது மற்றும் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சூடான் அரசுப் படைகளுக்கும், துணை இராணுவ அமைப்பான விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர், நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்தப் போருக்கு நிதி ஆதாரமாக தங்க வர்த்தகம் முக்கிய பங்கு வகிப்பதாகக் கருதப்படுவதால், அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆயுத மோதல்களின் தீவிரத்தை குறைக்க முடியும் என்ற நோக்கிலேயே இந்த பொருளாதாரத் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பேரவை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக