கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய – பியகம பிரதான வீதியின் 18ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோர சாலை விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, பியகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மற்றொரு முச்சக்கரவண்டியுடன் மோதியதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து பின்னர் எதிரே வந்த காருடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திய கடுவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் சம்பந்தப்பட்ட காரின் சாரதியும் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் மற்றொரு முச்சக்கரவண்டியின் சாரதியை வெலிவேரிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம், வாகனங்களின் வேகம் மற்றும் சம்பவம் நடைபெற்ற விதம் குறித்து வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதும், பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதும் உயிரிழப்புகளைத் தவிர்க்க மிகவும் அவசியமானதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக