அம்பாறை மாவட்டத்தில் நெல் சேமிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் அனுபமா மங்கள விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் நேற்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிரதான நெல் களஞ்சியசாலைகள் அமைந்துள்ள போதிலும், தற்போது 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு களஞ்சியசாலை மட்டுமே நெல் கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
விவசாயிகளின் அறுவடை அளவை கருத்தில் கொண்டு, வரவிருக்கும் நாட்களில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நெல் சேமிப்பு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை நெல் சேமிப்புத் தேவைகளுக்காக 18 தனியார் களஞ்சியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான ஏனைய களஞ்சியசாலைகளில் உள்ள பழைய நெல் இருப்புகளை அகற்றுவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், கூடுதல் களஞ்சியசாலைகளும் நெல் கொள்முதல் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக