இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சட்டரீதியான நடவடிக்கைக்கு பதிலாக கிராம பஞ்சாயத்து அபராதம் விதித்து பிரச்சினையை முடிக்க முயன்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளன.
தகவல்களின்படி, சம்பவத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குழந்தை தனது தாயிடம் நடந்ததை தெரிவித்துள்ளது. இருப்பினும், உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்காமல், கிராம பஞ்சாயத்தின் முன் விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாயத்தில் சிலர், இந்த வழக்கை காவல்துறைக்கு கொண்டு செல்லாமல் கிராமத்திலேயே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தொகையில் 20,000 ரூபாயை உடனடியாக செலுத்தியதாகவும், மீதமுள்ள தொகையை ஒரு வாரத்திற்குள் வழங்குவதாக அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த அபராதத் தொகையில் இருந்து சில கிராம மக்கள் மதுபானங்கள் மற்றும் அசைவ உணவுகள் வாங்கி விருந்து நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சமூக ஊடகங்களிலும் பொதுமக்களிடையிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான தகவல் காவல்துறைக்கு ரகசியமாக கிடைத்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிராமத்தில் மதுவிருந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரிடமிருந்து நேரடியாக புகாரைப் பெற்று, அதன் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாகவும், சட்டத்தை மீறி வழக்கை மறைக்க முயன்றதாகக் கூறப்படும் பஞ்சாயத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பு: பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும். இவ்வாறான குற்றங்களை சமரசம் அல்லது அபராதம் மூலம் தீர்ப்பது சட்டபூர்வமான நடைமுறை அல்ல.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக