உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், குறிப்பாக இரகசிய வாக்குமூலங்கள் கையாளப்பட்ட விதம் தொடர்பில் புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) முக்கிய இரகசிய வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வாக்குமூலங்களில், முன்னாள் இராணுவ புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சாட்சியாளர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அப்போதைய நீதவானின் முன்னிலையில் தனித்தனியாக இரகசியமாக வாக்குமூலங்களை வழங்கியதாகவும், இவ்வாறான வாக்குமூலங்கள் பொதுவாக நீதவானின் உத்தியோகபூர்வ அறையில், நீதவான், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் ஆகியோர் முன்னிலையில் மட்டுமே பதிவு செய்யப்படும் நடைமுறை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறைகளின்படி, இவ்வாறான இரகசிய வாக்குமூலங்கள் முத்திரையிட்டு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுவதுடன், வழக்கின் சட்டரீதியான தேவையின்றி எந்தத் தரப்பினருக்கும் அவற்றை வழங்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அப்போதைய கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, அந்த இரகசிய வாக்குமூலங்களின் பிரதிகளை சுரேஷ் சலேயின் சட்டத்தரணிக்கு வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் இரகசியத் தன்மை மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து நீதவான் இசுரு நெத்திகுமார நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாற்றப்பட்டதாகவும், அந்த மாற்றத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் கருத்துகள் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ நீதிமன்றத் தீர்ப்பு அல்லது இறுதி விசாரணை முடிவு இதுவரை வெளியாகவில்லை.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக