நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'தாய்க்கிழவி' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கிய இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனுக்கும் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டித்தந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற 100 நாள் வெற்றி விழா, படக்குழுவினரின் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
அந்த விழாவில் இயக்குனர் சிவக்குமார் முருகேசனின் உழைப்பையும் வெற்றியையும் பாராட்டும் வகையில், சிவகார்த்திகேயன் அவருக்கு மகேந்திரா BE (Mahindra BE) சொகுசு மின்சார காரை பரிசாக வழங்கினார். இந்த ஆச்சரியமான பரிசு விழாவில் கலந்து கொண்டவர்களின் கைதட்டலையும் பாராட்டுகளையும் பெற்றதுடன், அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் வெற்றியை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், இயக்குனரின் பங்களிப்பை மதித்து இவ்வாறு கௌரவித்த சிவகார்த்திகேயனின் செயலை ரசிகர்களும் திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக