நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தம்மை இழிவுபடுத்துவதுடன், வன்முறை அச்சுறுத்தல்களையும் விடுத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கைகள் அண்மைக் காலமாக தீவிரமடைந்துள்ளதால், அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது தனது கவனத்தையும் நாடாளுமன்ற பணிகளையும் பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயேச்சை உறுப்பினர்கள் வழக்கமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்குப் பின்னரே அமர்த்தப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தபோதிலும், அதற்கு மாறாக அர்ச்சுனா இராமநாதன் முக்கிய கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர்த்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். இது நாடாளுமன்றத்தின் வழக்கமான இருக்கை ஒதுக்கீட்டு நடைமுறைக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, நிலவும் நடைமுறைக்கு அமைவாக அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றி, சுயேச்சை உறுப்பினர்களுக்கான இடத்தில் அமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் அவர் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக