நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கடுமையான கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) ஒரு நாள் தாமதமாக தலையிட்டதற்கான காரணம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சன்தன கொடித்துவக்கு விளக்கம் வழங்கியுள்ளார். அவர் தெரிவித்ததன்படி, கடந்த ஜூலை 5ஆம் திகதி முதல் பொலிஸார் சிறைச்சாலைக்கு வெளியே தயார் நிலையில் இருந்த போதிலும், சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை கிடைக்கும் வரை சட்டரீதியாக சிறைச்சாலைக்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்பட்டது. இதனால், மோதல் ஆரம்பமான உடனேயே தலையிட முடியாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின் மருந்துப் பண்டகசாலையை உடைத்து அங்கிருந்த மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதால் அவர்கள் போதை நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்த நிலைமை திங்கட்கிழமை காலை மிகவும் மோசமடைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். இதையடுத்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கோரிக்கையின் பின்னரே பொலிஸார் மற்றும் STF சிறைச்சாலைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக