மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "அவதானம்" (Caution) மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய காலநிலை கணிப்பு மாதிரிகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை தொடர்பான தரவுகளின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள முதியவர்கள், நோயாளிகள் மற்றும் சிறுவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான வெயிலில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளைத் தவிர்ப்பதுடன், வெளியில் செல்லும்போது வெள்ளை அல்லது இளநிற பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் உடல்நல பாதிப்புகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக