கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தொடர்பாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தில் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளுக்கு நேரடியாக தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், பூர்வீக காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அண்மையில் இதனை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அவரது விளக்கத்தின்படி, 59 குடும்பங்களுக்கு சொந்தமான மொத்தம் 159.5 ஏக்கர் பூர்வீக காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பாடசாலை, பொதுநோக்கு மண்டபம், கோயில், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது பயன்பாட்டு கட்டமைப்புகளும் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அப்பகுதியில் உள்ள தென்னை, மா, பலா, பனை, வேம்பு உள்ளிட்ட பயன்தரும் மரங்கள் மற்றும் மக்களின் கால்நடைகள் தொடர்பிலும் மக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். அத்துடன், அப்பகுதியின் வளங்களைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் நந்திக்கடல் பகுதியின் வாழ்வாதார வளங்களை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பாதுகாப்பு பிரதி அமைச்சர், கேப்பாப்பிலவு மக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, பூர்வீக காணி விடுவிப்பு தொடர்பாக நடைமுறை தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக