இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
54 ஆம் அத்தியாயமான சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் படி, “மஹமோதர சிறைச்சாலை” என்ற பெயரில் இந்த புதிய சிறைச்சாலை நிறுவப்படவுள்ளது. இதன் நிர்வாக அதிகாரப் பிரதேசம் முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பயன்பாட்டில் இல்லாத மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியை தற்காலிக அடிப்படையில் பயன்படுத்தி இந்த சிறைச்சாலையை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் உள்ளிட்ட அண்மைய சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டின் சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த புதிய சிறைச்சாலை அமைப்பு பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக