பிரான்ஸின் தீவிர வலதுசாரி அரசியல் தலைவரான மரின் லெ பென், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பைப் பெற்றுள்ளார். பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றம் முன்னதாக அவருக்கு தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை மற்றும் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பொதுப்பண நிதி முறைகேடு நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தேர்தல் தடை காலத்தில் மாற்றமும் செய்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை 45 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதில் 30 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கணக்கிடப்படும் தடை காலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறைத்தண்டனையில் ஒரு ஆண்டு காலத்தை வீட்டிலிருந்தபடி மின்னணு கண்காணிப்பு கருவி அணிந்து கழிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த நிபந்தனை காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கு முன்பு, ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் ஒருவர் சுதந்திரமாக பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், நீதிமன்ற அனுமதியை நம்பி செயல்பட முடியாது என்றும் மரின் லெ பென் கருத்து வெளியிட்டிருந்தார்.
எதிர்பாராத காரணங்களால் தாம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், தனது தேசிய அணி கட்சியின் தலைவரான ஜோர்டான் பர்டெல்லாவிடம் வேட்பாளர் பொறுப்பை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் மரின் லெ பென் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக