நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு காய்ச்சலால் சுமார் 40 கைதிகள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்கள் மற்றும் சில தளங்களில் வெளியாகிய தகவல்களை சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ முற்றிலும் மறுத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நோக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், டெங்கு நோயால் 40 கைதிகள் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல்களுக்கு எந்தவிதமான உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்திருந்தால் அது உடனடியாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியிருக்கும் என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறைக்கைதிகளில் ஒருவருக்கு மட்டுமே டெங்கு நோய் உறுதி செய்யப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறை மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை போதுமானதாக இல்லாத சூழலில், நோயாளிகள் அருகிலுள்ள அரச மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெறுவது வழக்கமான நடைமுறையாக இருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
அத்துடன், மருத்துவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், டெங்கு காரணமாக 40 கைதிகள் உயிரிழந்ததாக பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக