ஆந்திரப் பிரதேசத்தில் காதல் உறவை முடித்த பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான மென்பொருள் பொறியாளர் அனந்தவாணி தனது வீட்டிலேயே கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனந்தவாணி, மாற்றுத்திறனாளியான தனது தந்தை மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தாயை பராமரிப்பதற்காக வீட்டிலிருந்தபடியே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோரின் நலனை முன்னிறுத்தி, தனது திருமணத்தையும் தொடர்ந்து ஒத்திவைத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் தகவலின்படி, அனந்தவாணிக்கும் சியாம் பாபு என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே காதல் உறவு ஏற்பட்டிருந்தது.
பின்னர், சியாம் பாபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த அனந்தவாணி, அவருடனான உறவை முற்றிலுமாக முடித்ததாக கூறப்படுகிறது.
இந்த முடிவால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் சியாம் பாபு, சம்பவத்தன்று இரவு அனந்தவாணியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை பலமுறை கத்தியால் குத்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அனந்தவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்குப் பிறகு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தலைமறைவாக உள்ள சந்தேகநபர் சியாம் பாபுவைக் கைது செய்வதற்காக சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக