காலாவதியான சீனியை புதிய சீனியுடன் கலந்து மறுபொதியிட்டு குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகித்ததாகக் கூறப்படும் பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனை நடத்தி சீல் வைத்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் பேலியகொட பகுதியில் அமைந்துள்ள குறித்த களஞ்சிய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்டு காலாவதியான சீனி இருப்புகள், புதிய சீனியுடன் கலந்து மீண்டும் புதிய பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட சீனி, சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது, தலா 50 கிலோகிராம் எடையுடைய சுமார் 85 ஆயிரம் சீனி மூடைகள் களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் மொத்தம் 42 இலட்சம் கிலோகிராம் சீனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்காலிகமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த களஞ்சியசாலைக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய இந்த மோசடி தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக