வெளிநாட்டவர் ஒருவருக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதிக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று நண்பகல் முன்னெடுக்கப்பட்டது. கிண்ணியா மாஞ்சோலை பகுதியிலிருந்து நிலாவெளி பகுதிக்கு கொண்டு செல்லத் தயாராக இருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரது வசமிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வலம்புரிச் சங்குகள் வெளிநாட்டவர் ஒருவருக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் இரண்டாம் கட்டளை அதிகாரியின் வழிநடத்தலில் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட வலம்புரிச் சங்குகளும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக