பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி இயக்கப்பட்ட விசேட தொடருந்துகளில் பயணம் செய்த சிலர் பெருமளவில் குப்பைகளை விட்டுச்சென்றதால் தொடருந்து பெட்டிகளில் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தின் போது விகாரைகள் மற்றும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படாதவை தொடருந்து பெட்டிகளிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உணவுக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் தேங்கியதால் பயணிகளுக்கும் தொடருந்து பணியாளர்களுக்கும் பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நோக்கி பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக இலங்கை தொடருந்துத் திணைக்களம் வழமையான சேவைகளுக்கு மேலதிகமாக விசேட தொடருந்து சேவைகளை ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, 2026 ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதனுடன், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் ஊடாகவும் ஆயிரக்கணக்கான மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் அனைவரும் சுகாதாரத்தையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்புகள் வலியுறுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக