கொழும்பு புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக வீட்டுப் பணிப்பெண் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, கைது செய்யப்பட்டுள்ள பெண் கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர். அவர் டுபாயில் 15 ஆண்டுகளும், குவைத்தில் 3 ஆண்டுகளும் பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருப்பதுடன், சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.
வீட்டு உரிமையாளர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வதை பயன்படுத்திக்கொண்டு, சுமார் 83 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் சுமார் 11 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த ஜூன் 30ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட தங்க நகைகளில் சிலவற்றை வாங்கியதாகக் கூறப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த 34 வயதுடைய நகைக்கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வீட்டில் இருந்து சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதியும், 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், திருடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை நகைக்கடை உரிமையாளர் உருக்கி, குருணாகல் பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக