முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர், 78 கிலோகிராம் கேரள கஞ்சாவை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 78 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனமும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக