தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக கைரேகை அடிப்படையிலான வருகைப் பதிவு முறைமையை கட்டாயமாக அமல்படுத்தும் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கும் பல முன்னணி தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் பணிக்கு வருகை தரும் நேரத்தையும் பணி நிறைவு செய்து வெளியேறும் நேரத்தையும் பதிவு செய்வதற்காக கைரேகை அடையாள இயந்திரங்களை பயன்படுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையின்படி, மருத்துவர்கள் பணிக்கு வரும்போதும், பணி முடித்து வெளியேறும்போதும் கைரேகை இயந்திரத்தில் தங்களது வருகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தீர்மானம் தொடர்பாக தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சாதாரண மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ஏற்கனவே குறைவாக உள்ள நிலையில், இவ்வாறான கட்டுப்பாடுகள் தொழில்சார் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு கைரேகை வருகைப் பதிவு முறைமை ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், தற்போது அதனை மருத்துவர்களுக்கும் விரிவுபடுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தனியார் மருத்துவமனை அமைப்பில் பணிபுரியும் மருத்துவர்களில் பெரும்பாலோர் தனியார் அல்லது வெளிநாட்டு மருத்துவப் பீடங்களில் பட்டம் பெற்றவர்களாக உள்ளதுடன், அரச மருத்துவமனைகளில் பணிபுரியும் பல மருத்துவர்களும் மேலதிக சேவையாக பகுதி நேர அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக