சகோதரரின் கொலை வழக்கிற்கான சட்டத்தரணி கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில், தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்று பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான நபர் ஒருவரின் மனதை உருக்கும் சம்பவத்தை உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட பொதுநிகழ்வொன்றில் உரையாற்றும் போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தெரிவித்ததன்படி, ஆரம்பத்தில் தனது கைவசமிருந்த பணத்தை பயன்படுத்தி சகோதரரின் வழக்கிற்கான சட்டச் செலவுகளை அந்த நபர் மேற்கொண்டிருந்தார். பின்னர் பணம் தீர்ந்ததால், தமக்குச் சொந்தமான காணியை அடகு வைத்து தேவையான செலவுகளை சமாளித்துள்ளார். அதன்பிறகும் வேறு சொத்துகள் எதுவும் இல்லாத நிலையில், திறமையான சட்டத்தரணிகள் குழுவின் சேவையைப் பெற தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்று கிடைத்த பணத்தின் மூலம் சட்டத்தரணி கட்டணத்தை செலுத்தியதாக நீதியரசர் குறிப்பிட்டார்.
இவ்வாறான முடிவுகளை பெரும்பாலானோர் விருப்பத்துடன் எடுப்பதில்லை என்றும், கடுமையான பொருளாதார நெருக்கடியே இத்தகைய நிலைக்கு அவர்களை தள்ளுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சட்டத்தரணிகளின் கட்டணங்களை அரசாங்கமோ அல்லது நீதிமன்றங்களோ கட்டுப்படுத்துவது நடைமுறைக்கு ஏற்ற தீர்வாக இருக்காது என்றாலும், கட்சிக்காரர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்க சட்டத்தரணிகள் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தங்களின் தொழில்முறை சேவைகளில் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையாவது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கும் பண்பை சட்டத்தரணிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சொத்து பிரிவினை வழக்குகள் போன்ற சிவில் வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, மேல்முறையீடுகள் மற்றும் திருத்த மனுக்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமுறை நடவடிக்கைகளும் நிறைவடைந்து உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை சராசரியாக 47 ஆண்டுகள் வரை காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதியைப் பெறும் நடைமுறையில் நீண்ட காலதாமதம் மற்றும் பொருளாதார தடைகள் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதால், நீதியை எளிதாகவும் சமமாகவும் அணுகக்கூடிய வகையில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என நீதியரசர் யசந்த கோதாகொட வலியுறுத்தினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக