சுங்க வரிகளைத் தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு வாகனங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன் உள்ளிட்டோருடன் தொடர்புடைய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
விசாரணைகளின் போது, முந்தைய அரசாங்கங்களின் காலப்பகுதியிலும் இந்த வாகனக் கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன்களில் மறைத்து திட்டமிட்ட முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பல சொகுசு வாகனங்கள் குறித்து சிஐடி தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சில வாகனங்கள் அரசியல்வாதிகளின் பிள்ளைகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் சில மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட வாகனம் தொடர்பான விசாரணையில், பதிவு செய்யப்பட்ட உரிமையாளராகக் குறிப்பிடப்பட்ட அரசியல்வாதி ஒருவரின் மகன், அந்த வாகனத்திற்கான சுங்க வரிகளை பின்னர் செலுத்தியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சில வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, அவற்றுக்கான வரியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்ற மற்றொரு சொகுசு வாகனத்தை சிஐடி பறிமுதல் செய்துள்ளதுடன், அதன் உரிமையாளர் அந்த வாகனம் முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு சொந்தமானது என விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த வாகனம் பின்னர் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் அதற்கான வரியை செலுத்தி விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விளக்கங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதியின் மகனை அடுத்த வாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக