மாரடைப்பு தற்போது உலகளவில் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதய நோய் அபாயம் அதிகரிக்கும் நிலையில், ஆரம்பகட்ட அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை பெறுவது உயிரைக் காப்பாற்ற உதவும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதய தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் ஆரம்ப நிலையில் வெளிப்படையான அறிகுறிகளை காட்டாமல் இருக்கக்கூடும். இதனால், 19 வயது முதல் காலமுறை இதயப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவசியமாகும். மேலும், மனஅழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற காரணிகளும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாக மார்பின் நடுப்பகுதியில் கடுமையான அழுத்தம் அல்லது வலி, அந்த வலி இடது கை, தோள், கழுத்து, தாடை அல்லது முதுகுப் பகுதிக்கு பரவுதல், அதிக வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி உணர்வு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை காணப்படுகின்றன. இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியமாகும்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொலஸ்ட்ரால், புகைப்பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், அதிக மனஅழுத்தம், தூக்கமின்மை மற்றும் பரம்பரை காரணிகள் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய ஆபத்து காரணிகளாகக் கருதப்படுகின்றன. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக