ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் அமைச்சரவைப் பிரிவில் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பணியாற்றிய அதிகாரி ஒருவர், பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதாள உலகக் குழுத் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட மேலும் பல பாதாள உலகக் குற்றவாளிகளுக்கும் இதேபோன்று போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட அதிகாரி, 2023 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரகப் பிரிவின் பிரதி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், பாதாள உலகக் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்தது, கொல்லப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவின் கோரிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட கரந்தெனிய ராஜுவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த அதிகாரியின் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இதேபோன்ற போலி கடவுச்சீட்டு மோசடிகளில் தொடர்புடைய மேலும் பல பாதாள உலகக் குற்றவாளிகள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக