டெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி ஆயோக் கவுன்சிலின் 11வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது திடீரென புகைமூட்டத்துடன் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுவதால், சம்பவம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிர்சேதம் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அரசாங்க முக்கியஸ்தர்கள் தங்கியிருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக