அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின்போது, டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளிகளை வெளியிட்ட இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் இயக்குதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட டிக்டொக் காணொளிகள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார், சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், காப்புறுதி சான்றிதழ் இல்லாமை, வருமான வரிச் சான்றிதழ் இன்றி வாகனம் இயக்குதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் 38,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தி சட்ட அமலாக்க அதிகாரிகளை அவமதிக்கும் செயல்கள் தொடர்பிலும் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக