கடலில் ஆபத்துக்குள்ளாகும் கடற்றொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் இருப்பிடத்தையும் அவசர நிலைகளையும் உடனுக்குடன் கண்காணிக்கக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகளை அரசாங்கம் விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் இணையத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா, அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக பருத்தித்துறை மற்றும் தீவகப் பகுதிகளில் கடலுக்கு சென்ற பல கடற்றொழிலாளர்கள் காணாமல் போன சம்பவங்கள் கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்றும், கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக வலுவான குரல் எங்கும் எழவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். கடற்றொழில் அமைச்சும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை தாமதமாக மேற்கொள்வதாகவும், சில சந்தர்ப்பங்களில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடலில் நடைபெறும் அவசர நிலைகளை உடனடியாக கண்டறிந்து மீட்புப் பணிகளை ஆரம்பிக்கக்கூடிய மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜிபிஎஸ் கண்காணிப்பு, அவசர எச்சரிக்கை கருவிகள் மற்றும் நேரடி தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் போன்ற நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இனிமேல் எந்தக் கடற்றொழிலாளரும் கடலில் காணாமல் போகக் கூடாது என்பதே தங்களது முக்கிய நோக்கம் என தெரிவித்த சங்க பிரதிநிதிகள், கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வந்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கை வடக்கு கடற்றொழிலாளர் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக