கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்த இளம் பெண் தொடர்பில் பொலிஸாருக்கு முதற்கட்ட விசாரணைகளிலேயே சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக, பெண் காணாமல் போனதாக முறைப்பாடு செய்த நபரின் நடவடிக்கைகள் மற்றும் தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து சந்தேகநபரின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பெண்ணை தாக்கி கொலை செய்த பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் புதைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் மூன்று அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய வாசனா சந்தமாலி வீரசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் சென்றிருந்த சந்தேகநபர், நேற்று மீண்டும் தனது வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டுத் தோட்டத்தில் ஒளிந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது அவரது உடலில் இருந்து நாற்றம் வீசியதாகவும், அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமணமானவரான சந்தேகநபர் தனது மனைவியைப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக