அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தைத் துண்டித்துக் கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட கொடூரச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 'கருணே லொக்கா' என அழைக்கப்படுபவர் என்பதுடன், இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் ஏற்கனவே பிடியாணை (Warrant) உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி இரவு இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றதுடன், பாதிக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது தலை மாமடல சந்தியிலுள்ள சிலையின் கைகளுக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது. விசாரணைகளின்படி, கொலை செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் லுணுகம்வெஹெர பகுதியில் தலைமறைவாகியிருந்த மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், பிரதான சந்தேகநபரான 'கருணே லொக்கா' மாமடல பகுதியில் நடமாடுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள், நேற்று (21) இரவு அவரை மாமடல பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், சந்தேகநபரை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக