நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலகளவில் ஏற்கனவே 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ள 'கருப்பு' திரைப்படம், அதன் முதல் நாளில் இந்திய அளவில் சுமார் 15.50 கோடி ரூபாயும், உலகளவில் நல்ல தொடக்கத்தையும் பெற்றிருந்தது.
இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படம் 'கருப்பு' படத்தின் வசூலை முந்தியுள்ளது. ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜார்ஜ்குட்டியின் திரில்லர் கதையைக் காண ரசிகர்கள் தியேட்டர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
திரிஷ்யம் 3 முதல் நாள் வசூல்:
உலகெங்கிலும் 5,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', முதல் நாளில் இந்திய அளவில் 15.85 கோடி ரூபாய் நெட் (Net) வசூலையும், உலகளவில் சுமார் 43.37 கோடி ரூபாய் கிராஸ் (Gross) வசூலையும் பெற்று மிரட்டலான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாகக் கேரளாவில் மட்டும் முதல் நாளில் 11 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
'கருப்பு' படத்தின் ஆரம்பகட்ட இந்திய வசூல் சாதனையை 'திரிஷ்யம் 3' முந்தியிருந்தாலும், கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால், வார இறுதி நாட்களுக்குப் பிறகும் இதே வசூல் வேகம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக