நடிகர் விஜய் நடித்திருக்க வேண்டிய பல வெற்றி திரைப்படங்கள் சூழ்நிலைகளால் தவறிவிட்டதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி, அண்மையில் வழங்கிய பேட்டியில் நடிகர் விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
லிங்குசாமி கூறுகையில், 'ரன்' திரைப்படத்தின் கதையை முதலில் நடிகர் விஜயிடம் கூறும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.
அப்போது ஏ.வி.எம். சரவணன் அந்தக் கதை விஜய்க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரைத்ததாகவும், அதன் பின்னர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் (SAC) அவர்களிடம் கதையை விவரித்ததாகவும் கூறினார்.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் விஜய் 'தமிழன்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், தேதிகள் மற்றும் பிற காரணங்களால் அந்தத் திட்டம் முன்னேறவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மேலும், 'ரன்' படத்தில் காதல் கதைக்காக நாயகன் பெண்களின் பின்னால் சுற்றும் காட்சிகள் இருப்பதால், அது விஜயின் அன்றைய திரைமுகத்திற்கு பொருத்தமாக இருக்காது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக லிங்குசாமி தெரிவித்தார்.
இதனுடன், தனது வெற்றிப்படங்களான 'சண்டக்கோழி' மற்றும் 'வேட்டை' ஆகிய திரைப்படங்களையும் முதலில் விஜயை மனதில் வைத்தே உருவாக்கியதாக லிங்குசாமி கூறினார்.
ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த வாய்ப்புகளும் அமையாமல் போயின என்றும், பின்னர் அந்தக் கதைகள் வேறு நடிகர்களுடன் உருவாகி வெற்றி பெற்றன என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
லிங்குசாமியின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. விஜய் நடித்திருக்கக் கூடியதாக இருந்த இந்த திரைப்படங்கள் வேறு நடிகர்களின் மூலம் வெளியானது, தமிழ் சினிமாவில் "மிஸ் ஆன கூட்டணிகள்" என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக