நாட்டில் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், இலங்கை முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிட்ட பகுதிகளில் விசேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் வாசித்து அறிவித்தார். ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட விசேட அறிவிப்பின் அடிப்படையில் இந்த தகவல் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் அனைத்து உறுப்பினர்களும் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களுக்குள் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 21(2) ஆம் பிரிவுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய 2(3) ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைய, ஜனாதிபதியின் இந்த அவசர உத்தரவு நாடாளுமன்றத்தின் தகவலுக்காகவும் தேவையான மேல்நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக