அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய தொழிலாளர் செய்தி நிறுவனம் (ILNA) வெளியிட்ட தகவலின்படி, இரு நாடுகளுக்கிடையிலான சமாதான ஒப்பந்த வரைவு தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில், இரு நாடுகளும் அனைத்து இராணுவ தாக்குதல்களையும் முழுமையாக நிறுத்துதல், உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை தவிர்த்தல், மற்றும் பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கான புதிய ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்குதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், ஈரான் ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றும் பட்சத்தில், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை, அடுத்த ஒரு வாரத்துக்குள் இரு தரப்பும் மேலதிக பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முன்னேற்றம், உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தை நிலைமைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக