இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஒரே மாதத்தில் கணிசமான அளவில் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சந்தையில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்கள் பெரும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக பருப்பு, அரிசி, சீனி, வெங்காயம், காய்கறிகள் போன்ற அன்றாட தேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதேநேரம் போக்குவரத்து, மின்சாரம், கல்வி மற்றும் இதர சேவைகளுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவற்ற பிரிவின் பணவீக்கம் 7.8 சதவீதம் வரை உயர்ந்திருப்பது நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் சவாலாக மாறிவருவதை காட்டுகிறது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், அடுத்த சில வாரங்களில் சந்தையில் மேலும் விலை உயர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தொடர்ச்சியான விலை உயர்வால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் பல குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக