தமிழ் திரையுலகில் பல பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பின்னணிப் பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன் தற்போது கடுமையான உடல்நல பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடிய இவர், தனது தனித்துவமான குரல் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தை பெற்றிருந்தார். குறிப்பாக எங்கேயும் எப்போதும், நண்பேன்டா, ரெமோ போன்ற திரைப்படங்களில் இடம்பெற்ற அவரது பாடல்கள் இன்னும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.
ஆனால் தற்போது, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பேச கூட முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கை மற்றும் முகப்பகுதி செயலிழந்துள்ளதாகவும், அவர் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையை அறிந்த கேபிஒய் பாலா நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்துள்ளார். அவர் ரூ.50,000 பண உதவி வழங்கியதுடன், எதிர்கால சிகிச்சைகளுக்கும் உதவ முன்வந்துள்ளார். மேலும், ரிச்சர்ட் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என மனமார்ந்த ஆதரவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரும் அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். பல திறமையான கலைஞர்கள் இவ்வாறு மறைக்கப்பட்ட நிலையில் வாழ வேண்டிய சூழல் குறித்து இந்த சம்பவம் சமூகத்தில் பரவலான கவலையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக