நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பகுதியில் குடும்பத் தகராறு வன்முறையாக மாறியதில், 65 வயதுடைய தந்தை ஒருவர் தனது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் லிந்துலை மவுஸ்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் முதலில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி ஒன்று அறுக்கப்பட்டு இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக தந்தை மற்றும் மகனுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் கூரிய ஆயுதம் ஒன்றால் தந்தையை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபரான மகன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக