அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 7, 2026) ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அறிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகத் திறந்து, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு வழிவிட ஈரான் தவறும் பட்சத்தில், அந்நாட்டின் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் முற்றாக அழிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள இறுதி காலக்கெடுவான இன்று இரவு (கிழக்கு நேரப்படி இரவு 8:00 மணி) முடிவடைவதற்குள் ஈரான் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால், "ஒரே இரவில் நாடு முழுவதும் முடக்கப்படும்" என வாஷிங்டனில் இருந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த 48 மணிநேரத்தில் ஈரானின் பல பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றைய தாக்குதல்கள் ஈரானின் போர் வரலாற்றில் மிக உக்கிரமானதாக இருக்கும் என பென்டகன் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பானது வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக