தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் கோலோச்சி வருபவர் சுஜாதா மோகன். இவரது மகள் ஸ்வேதா மோகனும் தற்போது புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுஜாதாவுக்குச் சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட பின் மேடையில் பேசிய அவர், தனது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கும் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எந்த மேடையிலும் பாடவில்லை" என்று தெரிவித்த சுஜாதா, அதற்கான காரணத்தையும் விளக்கினார். தனக்குத் தொண்டையில் ஒரு நீண்டகாலப் பிரச்சினை இருப்பதாகவும், அதன் காரணமாக முன்னரைப் போலத் தடையின்றிப் பாட முடிவதில்லை என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். தனது இனிய குரலால் பல தசாப்தங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஒரு மகா கலைஞர், தனது உடல்நிலை குறித்து இவ்வாறான ஒரு தகவலைப் பகிர்ந்தது அங்கிருந்தவர்களையும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக