சீனாவின் இராணுவ மற்றும் கடலோரக் காவல்படை நடவடிக்கைகள் தாய்வானைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவ அகாடமி பட்டதாரிகளுக்கான கம்யூனிச எதிர்ப்பு தேசபக்தி வகுப்புகளை தாய்வான் மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது.
குளிர்போர் காலத்தில் சீன கம்யூனிசத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு அந்த பாடத்திட்டம் பொதுவான தேசபக்தி கல்வி என்ற வடிவத்திற்கு மாற்றப்பட்டது.
தற்போது சீனாவிடமிருந்து இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் பாதுகாப்பு சவால்கள், தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் இராணுவத்தின் கடமை குறித்த விழிப்புணர்வை இளம் அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும் நோக்கில் பழைய கம்யூனிச எதிர்ப்பு பாடத்திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் 110-க்கும் அதிகமான சீன இராணுவ மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்கள் செயற்பட்டு வருவதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு சபை பொதுச்செயலாளர் ஜோசப் வூ தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த விரிவடைந்த கடற்படை நடவடிக்கைகள் அதன் பிராந்திய ஆதிக்க நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், தாய்வான் மீதான பெய்ஜிங்கின் உரிமைகோரல்களை தாய்வான் அரசு தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக