நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதலின் போது, பெண் கைதிகள் குழுவொன்று சிறைக் கட்டிடத்தின் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கைதிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு கைதிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலுடன் தொடர்புடைய முக்கிய கைதிகள் மூவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் பல்லன்சேன முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2,417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறை அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெண் கைதிகள் தங்கியுள்ள பிரிவில் ஏற்பட்டிருந்த பதற்றமும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண் கைதிகள் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கைதிகள் குழுக்களுக்கு இடையேயான மோதலாகும் என்றும், சிறை அதிகாரிகளுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. கைதிகளின் உறவினர்கள் தேவையற்ற அச்சம் அல்லது வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும், கைதிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக