தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
இன்று கேரளத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு மாலை நேரத்தில் விமானம் மூலம் திருச்சி வந்தடைய உள்ளார்.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக பஞ்சப்பூர் செல்லும் அவர், அங்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக பலத்த பொலிஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 3,680 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கவுள்ள நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பிரதான் மந்திரி கிராம சாலை யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள 89 கிராமப்புற சாலைகளையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
இதற்குடன், கங்கைகொண்ட சோழபுரம் அருகே அமைக்கப்படவுள்ள பசுமை வழிப் புறவழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
அதேபோல் இரண்டு அம்ரீத் பாரத் விரைவு ரயில்கள் உட்பட மொத்தம் ஆறு புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக