ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமெனி தெரிவாகியுள்ளதை வட கொரியா வரவேற்று, அவருக்கு தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஈரானின் அரசியல் தீர்மானத்தை தாங்கள் மதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
அறிக்கையில், பிப்ரவரி 28 ஆம் தேதி போரின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகனான மொஜ்தபா காமெனி நாட்டின் புதிய உயர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வட கொரியா மதிப்பதாகவும், ஈரானின் அரசியல் அமைப்பையும் தேசிய இறையாண்மையையும் ஆதரிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை எனவும் வட கொரியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதித்து, சர்வதேச அளவில் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையிலான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இத்தகைய செயல்களை உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு கண்டித்து நிராகரிக்க வேண்டும் என்றும் வட கொரியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், 12 நாட்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரை தொடங்கியதையடுத்து, மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது என்றும் வட கொரியா தனது அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக