முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்காக இவ்வாறு கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் ஒருமுறை ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தாம் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் குறித்த திகதியில் முன்னிலையாக முடியாது என கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
எனவே தமக்கு வேறு ஒரு திகதியை ஒதுக்கித் தருமாறு கோட்டாபய ராஜபக்ச எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கைக்கு அமைவாக இந்த மாதம் 17 ஆம் திகதி அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் கொழும்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் சில வீடுகளை சட்டத்திற்கு முரணான வகையில் சிலருக்கு வழங்குவதற்காக பரிந்துரை செய்து கடிதங்கள் வழங்கியமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக