பணிக்கு சமூகமளிக்காத மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என Ceylon Electricity Board நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 12,000க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (10.03.2026) பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் பல முக்கிய நகரங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக Gampaha, Kalutara, Ratnapura, Beruwala, Puttalam மற்றும் Anuradhapura ஆகிய பகுதிகள் பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு 6 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்து, மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கடந்த 8ஆம் திகதி நள்ளிரவுடன் மின்சார சபை என்ற அமைப்பு முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி முதல் மின்சார சபையின் செயல்பாடுகள் 6 வெவ்வேறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக