கடந்த ஒரு வார காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி குறைந்ததால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த 10 முதல் 15 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக Sri Lanka Tea Exporters Association தெரிவித்துள்ளது.
இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலையின் பெரும் பகுதி Middle East நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தேயிலை ஏற்றுமதியால் கிடைக்கும் சுமார் 1.5 பில்லியன் டொலர் வருமானத்தில், சுமார் 530 மில்லியன் டொலர் வருமானம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே கிடைப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக கடல் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், காப்புறுதி கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக தேயிலை ஏற்றுமதி தடைபட்டு, நாட்டுக்கு வரவேண்டிய வருமானத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை காரணமாக தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே வரவிருக்கும் சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு தோட்ட உரிமையாளர்களுக்கு நிதிச் சுமை ஏற்படாமல் இருக்க சலுகைக் கடன்களை வழங்குமாறும், தேயிலை விற்பனை மற்றும் உர விநியோகத்தில் சலுகைகள் வழங்குமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஏற்றுமதி வரியில் 15 சதவீதத்தை ஒதுக்கி, இவ்வாறான அவசர சூழல்களில் தோட்ட உரிமையாளர்களை பாதுகாக்க சுயாதீன நிதி அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் எனவும் முன்மொழிந்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக