மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் (89 ரன்கள்) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. இது டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தேலின் அதிரடி சதம் (105 ரன்கள்) இருந்தும், இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே எடுக்க முடிந்தது. இந்தத் திரில் வெற்றியைத் தொடர்ந்து, அகமதாபாத் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
இந்தப் போட்டியில் '7' என்ற எண் மீண்டும் ஒருமுறை தோனி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. முன்னாள் கேப்டன் தோனி நேரில் வந்து போட்டியை ரசித்த நிலையில், போட்டியின் பல்வேறு நிகழ்வுகள் 7 என்ற எண்ணைச் சுற்றியே அமைந்துள்ளன:
வெற்றி வித்தியாசம்: 7 ரன்கள்
இரு அணிகளும் இழந்த விக்கெட்டுகள்: தலா 7
சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸர்கள்: 7
ஜேக்கப் பெத்தேல் அடித்த சிக்ஸர்கள்: 7
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் எடுத்த ரன்கள்: 7
திலக் வர்மா சந்தித்த பந்துகள்: 7
தோனியின் வருகை இந்திய அணிக்கு ராசியாக அமைந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #ThalaForAReason என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக