இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை “கடலில் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான அட்டூழியம்” என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கடுமையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானியக் கரையிலிருந்து சுமார் 2,000 மைல்கள் தொலைவில் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்தியக் கடற்படையின் விருந்தினராக 130 மாலுமிகளுடன் பயணித்த ‘டெனா’ போர்க்கப்பல் எந்தவித எச்சரிக்கையும் இன்றி தாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள இந்த முன்னுதாரணத்திற்கு வருங்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் நவீன ரக போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டொர்பிடோ ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் இதுவரை 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 32 பேர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்ட மாலுமிகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக