யாழ்ப்பாணம் காங்கேசன் துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போன நிலையில், அவர்கள் தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரு கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்றபோது அவர்கள் சென்ற படகு பழுதடைந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது.
இதனை அவதானித்த இந்திய கடற்றொழிலாளர்கள் அந்த படகை தங்களது விசைப்படகின் உதவியுடன் இழுத்துச் சென்று, குறித்த இரு கடற்றொழிலாளர்களுக்கும் உணவும் நீரும் வழங்கிய பின்னர் அவர்களை மீண்டும் இலங்கை கடல் எல்லையில் விட்டு சென்றுள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் கடல் அலையால் படகு மீண்டும் அடித்துச் செல்லப்பட்டு இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (04.03.2026) ஏழாவது நாளில் தமிழ்நாட்டின் வடக்கு கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக