அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், உலகளாவிய சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கட்டார் எனர்ஜி நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நிறுவனம் தனது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இதன் தாக்கமாக இயற்கை எரிவாயு விலைகள் வேகமாக உயர்ந்தன.
வார இறுதியில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 82 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 16 டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும், இது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் சவுதி அரேபியாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடற்கரை பகுதியில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரம்கோ நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீடித்த மோதல் சூழ்நிலை எரிசக்தி விலைகளை மேலும் உயர்த்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக